வியாழன், 30 செப்டம்பர், 2010

மாயவலை எனும் இண்டர்நெட்.....100 சூப்பர் டிப்ஸ்

மாயவலை எனும் இண்டர்நெட்.....100 சூப்பர் டிப்ஸ்

இண்டர்நெட் எனும் மாயவலை பாதுகாப்பாக கையாள… பக்குவமாக கற்றுக்கொள்ள…


சூப்பர் டிப்ஸ் 100
1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக… ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்று சொல்லப்படுவது போல்… ‘வீட்டுக்கு ஒரு கணினி’ என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!



மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது. அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்… அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது. கற்றுக் கொள்ளுங்கள்… கையாளுங்கள்… இன்டர்நெட்டையும் வாழக்கையையும் அழகாக!


சாஃப்ட்வேர்… சிறு அறிமுகமும் சில தகவல்களும்!
கணினியின் இதயம்… சாஃப்ட்வேர்! அந்தளவுக்கு கணினியின் இயக்கத்துக்கு முதற் காரணமாக இருக்கும் சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் பற்றிய அடிப்படை விவரங்கள் அறிவோமா..?

1. கணினி பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.

2. அசல் மென்பொருட்களைவிட, அவற்றின் போலி பாதிப்புகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது சுதாரித்துக் கொண்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ‘களையெடுப்பு’ நடவடிக்கையில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.

3. கம்ப்யூட்டரில் ஏதாவது பழுது ஏற்பட்டால், நாம் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விடும். எனவே, கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள் அனைத்தையும் ‘பேக்-அப்’ எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காகவே இலவச மென்பொருட்கள் இணையத்தில் உலவுகின்றன.

4. நம் கணினியில் நீண்ட காலம் பயன்படுத்தாத மென்பொருள் தொகுப்புகளைத் தயங்காமல் அகற்றிவிட வேண்டும். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொள்வதோடு, வைரஸ்களின் தாக்குதலுக்கும் அவை எளிதில் ஆளாகக் கூடும்.

5. தேவையில்லாத மென்பொருட்களை நிரந்தரமாக அகற்றுவதற்கு, கன்ட்ரோல் பேனல் (Control panel) சென்று, சேர்த்தல் அல்லது நீக்கல் (Add or remove programs) செய்வதற்கான ஐகானை கிளிக் செய்து, ஒவ்வொரு மென்பொருளாக தேர்வு செய்து அகற்றலாம்.
 
இணையுங்கள் இணையத்தின் தேடுதல் (Search Engine) வேட்டையில்!

இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த ‘ஸர்ச் இன்ஜின்’களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்…

6. இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ’1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்’ என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

7. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.

8. ஸர்ச் இன்ஜின்களில் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், துல்லியமான தகவல்களைப் பெறலாம்.

9. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால், சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + realestate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.

10. பிரபலமான ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
 
11. உதாரணமாக, சூப்பர் ஸ்டார் என்ற சொல்லைத் தேட வேண்டும்… ஆனால், தேடலின் முடிவில் ரஜினிகாந்த் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், சூப்பர்ஸ்டார் – ரஜினிகாந்த் (Superstar – Rajinikanth) என்று தேடுங்கள்.

12. ‘நான் அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம்’ என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள். உதாரணமாக, “அவள் விகடன்” (“Aval Vikatan”).

13. குறிப்பிட்ட ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு ”~”’ என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ”அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர் (“Aval vikatan ~ Women Welfare”).

14. ஒரு சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ”டிஃபைன்: (”define:”) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, டிஃபைன்:பெலிசியேஷன் (“define: felicitation”).

விரைவான தகவல் தொடர்புக்கு கை கொடுக்கும் மெயில்… இ-மெயில்!
சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல… உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில ‘கவனிக்க’ சங்கதிகள் இங்கே…

15. முன்பெல்லாம் மின்னஞ்சல்களின் கொள்ளளவு மிகச் சிறியதாக இருந்ததால் பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. இப்போது போட்டி காரணமாக, மின்னஞ்சல் சேவை அளிக்கும் ஒவ்வொரு இணையதளமும் 1 ஜி.பி. மற்றும் அதற்கு மேல் கொள்ளளவுள்ள வசதியைத் தருகின்றன.

16. ஜி-மெயில் மின்னஞ்சலில் 20 எம்.பி. அளவு வரை கோப்புகளை இணைப்பாக அனுப்பலாம். இதுவே அதிகபட்ச இணைப்பு அளவாக இருந்தது. ஆனால், யாஹ” இப்போது அதிரடியாக 100 எம்.பி. வரை இணைப்பாக கோப்புகளை அனுப்பும் வசதியை தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது.

17. மின்னஞ்சல் அனுப்பும்போது மிகுந்த கவனம் தேவை. அனுப்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நீங்கள் டைப் செய்தவற்றை முழுதாக படித்துவிடுங்கள். அவசரப்பட்டு send பட்டனை அழுத்திவிட்டால் அவ்வளவுதான்… மின்னல் வேகத்தில் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மின்னஞ்சல் சென்று விடும்.

18. ‘அவுட்லுக்’ மற்றும் ‘அவுட்லுக் எக்ஸ்பிரஸ்’, சொந்தமாக வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற மின்னஞ்சல் புரோகிராம்கள். இதில் இணைய இணைப்பு இல்லாமலும் மின்னஞ்சல்களைப் படிக்கலாம். ஜி-மெயில், யாஹ” என எந்த மின்னஞ்சல்களையும் இவை பதிவிறக்கித் தரும்.

19. ‘அவுட்லுக்’ மூலம் மின்னஞ்சல் அனுப்பும்போது, முதலில் ‘அவுட்பாக்ஸ்’ (Outbox) பகுதியில் உங்கள் மின்னஞ்சல் நிறுத்தப்படும். அதன் பின்னரே மற்றவர்களுக்கு அனுப்பப்படும். எனவே, தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பினால்கூட, ‘அவுட்பாக்ஸ்’ சென்று அதைத் தடுத்து நிறுத்திவிடலாம்.

20. நண்பரிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. ‘ஃபார்வேர்ட்’ (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.

21. உங்கள் மின்னஞ்சலில் ‘தானியங்கி பதில் செய்தி அனுப்பும் வசதி’யை செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோருக்கு உடனடியாக, ‘உங்கள் மெயில் கிடைத்தது. விரைவில் பதில் அனுப்புகிறேன்’ என்பது போன்ற செய்திகள் சென்று சேரும்.
குப்பை மெயில் (Spam) தெரியுமா..?
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘ஸ்பேம்’ எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம். அதன் விவரங்கள் இங்கே…

22. உலகில் ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.

23. ஏன் வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை ‘ஸ்பாமர்கள்’ எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.

24. இணைப்புகள் இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.

25. அனைத்து மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.

26. தானியங்கியாக குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.

27. குப்பைக்குள் மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.

28. உங்கள் மின்னஞ்சல் கணக்கின் ‘ஸ்பேம்’ பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.
 
29. தெரியாத்தனமாக குப்பை மெயில்களுக்கு ‘என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்’ என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

வைரஸை (Virus) விரட்டுவோம்!
நம் கணினியின் இயக்கத்தை தாமதப்படுத்தும், ஸ்தம்பிக்க வைக்கும், ஒரு கட்டத்தில் செயலிழக்க வைக்கும் வில்லன்கள்தான் வைரஸ்கள்! அந்த வில்லன்களிடமிருந்து நம் கணினி கன்னுக்குட்டியைக் காப்பாற்றுவதற்கு பிடியுங்கள் இந்த டிப்ஸ்களை!

30. வைரஸ்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். சில வைரஸ்கள் சிறிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை சாதாரண ‘ஆன்டி வைரஸ்’ மென்பொருட்களை வைத்து அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து மொத்தத்தையும் காலியாக்காமல் விடாது.
31. ஸ்பைவேர், ஆட்வேர், ட்ரோஜான், மால்வேர் என பல்வேறு வடிவங்களில் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றுள் ட்ரோஜன் மிக மோசமானது.

32. இணையத்திலிருந்து ஏதேனும் மென்பொருள் அல்லது புரோகிராமை பதிவிறக்கும்போது, அவற்றுடன் ட்ரோஜனும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். அதன் பின் நம் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டு அபகரிக்கப்படும்.

33. விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கியமான மென்பொருள் தொகுப்புகளின் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், இணைய தளத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் மைக்ரோசாஃப்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.

34. கம்ப்யூட்டரில் அவ்வப்போது ‘ஆட்டோமேடிக் அப்டேட் செய்து கொள்ளுங்கள்’ என்ற செய்தி தோன்றும். அதைக் க்ளிக் செய்தால் விண்டோஸ், இணைய தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், மைக்ரோசாஃப்ட் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

35. இணையத்தில் உலவும்போது குட்டித் திரைகளில் தோன்றும் விளம்பரங்களில் பெரும்பாலானவை வைரஸ்களின் தூரத்துச் சொந்தங்களாக இருக்கும். எனவே, டோன்ட் டச் இட்!

36. இணையத்திலிருந்து முன் பின் தெரியாத புரோகிராம்கள், விளையாட்டுக்களை பதிவிறக்குவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அவை வைரஸ் விருந்தாளிகளாக இருக்கலாம்.

37. இணைய இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
 
38. இணையத்திலிருந்து வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை (ஆன்டி வைரஸ்) இலவசமாக பதிவிறக்கும்போது கவனம். சில நேரங்களில் இந்த இலவசங்களுடன் சேர்த்து வைரஸ்களும் இணைப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே முறையான, நம்பத்தகுந்த இடங்களில் இருந்து வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

39. முன் பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம். குறிப்பாக, இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை வைரஸ்களைக் கொண்டிருக்கும்.
நண்பர்கள், உறவுகளை, புதியவர்களை இணையத்தில் இணைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் (Social networking sites)!
தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இணைய பயனாளர்கள் அனைவரையும் ஆட்டிப் படைப்பது சமூக வலையமைப்பு எனும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள்தான். ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ், லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் இணைய உலகில் உள்ளன. அவை பற்றி கொஞ்சம்… கொறிக்க!
 
40. இந்தியாவில் ஃபேஸ்புக், ஆர்குட் ஆகிய தளங்கள் புகழ்பெற்றவை. ஆர்குட் என்பது கூகுளின் சேவை. மிக அதிகமான பயனாளர்களைக் கொண்ட இந்த சேவையை பின்னுக்கு தள்ளிவிட்டது ஃபேஸ்புக்.

41. சோஷியல் நெட்வொர்க் தளங்களில் பெண்களில் இளவயதினர் அதிகளவிலும், ஆண்களில் நடுத்தர வயதினர் அதிகளவிலும் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
42. இந்தியாவில் ஆர்குட் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில்தான் அதிகளவில் பயனாளர்கள் இருப்பதால், இந்த இரண்டு சேவைகளும் போட்டி போட்டுக் கொண்டு மேம்பட்ட வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகின்றன.

43. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.
 
ஹேக்கிங் (Hacking)… கவனம்!
நமக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துக்களை, அதாவது ஆன்லைன் சொத்துக்களை நம் கண் முன்னாலேயே அழகாக அபகரித்துச் செல்வதே ஹேக்கிங். அதைப் பற்றி சில துளி தகவல்கள் இங்கே…

44. ஹேக்கிங் என்பது இன்று நேற்று முளைத்த சொல் இல்லை. 1900-ம் ஆண்டுகளிலேயே, கம்யூனிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மக்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஹேக்கிங்கின் தொடக்கம் என்று கூறுகின்றனர்.


45. ஹேக்கிங் என்ற முறைகேட்டை எல்லோராலும் செய்து விட முடியாது. உலகின் மிகச்சிறந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் 100 பேரைத் தேர்வு செய்தால், அவர்களுள் 80 பேர் ஹேக்கர்களாக இருப்பர்.

46. அதிக தொழில்நுட்ப அறிவு, புத்திசாலித்தனம், மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் என பல சிறப்புகளைப் பெற்றிருப்பவர்தான் முழுமையான ஹேக்கராக முடியும்.
 
47. இணைய இணைப்புதான் ஹேக்கிங் மன்னர்களுக்கு முதுகெலும்பு. இணையத்தில் நாம் உலவுவதை கண்காணித்து, நம்மைக் குறிவைத்தால் போதும், அடுத்த சில நிமிடங்களுக்குள் நாம் ஹேக்கிங் வளையத்துக்குள் சிக்கிவிடுவோம்.

48. சிலருக்கு ‘பாப் – அப்’ திரைகள் மூலம் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகள் தோன்றும். சிலருக்கு, ‘உங்கள் கம்ப்யூட்டர் ஆபத்தில் உள்ளது’ என்பது போன்ற எச்சரிக்கைச் செய்திகள் தோன்றும். இதுபோன்ற செய்திகளை கிளிக் செய்துவிட்டால் முடிந்தது கதை.

49. பொதுவாக இந்த ஹேக்கர்கள், ஏதாவது ஒரு சிறிய ஓட்டை வழியாக தண்ணீரைப் போல ஊடுருவி, நம்மை மூழ்கடித்து, நம் அறிவுசார் சொத்துக்கள், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மற்றும் சேவைத் துறை என்று நாம் பயன்படுத்தும் பலவற்றையும் தங்கள் வசம் வளைத்துக் கொள்வார்கள்.
 
50. நமது கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.

51. வொயிட் ஹேட், க்ரே ஹேட், ஸ்கிரிப்ட் கிட்டி, பிளாக் ஹேட் என ஹேக்கிங்கில் பலவகை உண்டு. இவற்றுள் பிளாக் ஹேட் மிக மோசமானது. நம் வங்கிக் கணக்குகளை மொத்தமாக முடக்கி பணத்தை அபகரிக்கும் ஹேக்கிங் இது.

52. உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் சந்தேகப்படும்படியான லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்களை ஆன்லைனில் அளிக்கும்போது கவனமாக இருந்தால், ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்கலாம்.
ஆக்டிவ்வாக இருங்கள் ஆன்லைனில்!
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை… ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக…
பயன்படுத்துங்கள் ஆன்லைன் பேங்க்கிங் (Online Banking)!

53. அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.

54. ஆன்லைன் வங்கிக் கணக்கின் முகவரிப் பகுதியில் http:// என்பதற்கு பதிலாக https:// என்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனடியாக அந்தத் தளத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.

55. இப்போது ‘பிஷ்ஷிங்’ (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் ‘பிஷ்ஷிங்’!

56. இதுபோன்ற தளங்களை உண்மை என நம்பி, பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களை அளித்தால், அவ்வளவுதான்… அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக வேறு கணக்குக்குப் பணம் சுருட்டப்பட்டிருக்கும்.
 
57. இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.

58. சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள் அனுப்பவில்லை எனில், உடனடியாக போலி மின்னஞ்சல் பற்றி உங்கள் வங்கிக்கு புகார் அளியுங்கள்.

59 ஆன்லைன் பேங்கிங் செய்யும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருளை இயக்குவது சாலச் சிறந்த செயல்.

60. சொந்த கம்ப்யூட்டர் அல்லாமல் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கை கையாளும்போது கவனம் தேவை. முறையாக தளத்தைவிட்டு வெளியேறுவதுடன், பிரவுசிங் செய்த தடத்தை அகற்றிவிட்டு வெளியேறுங்கள்.

நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (Online ticket booking)!

61. ரயில், விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.

62. பயணங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நிறுவனங்கள் அளிக்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த கட்டணங்களை அளிக்கும் சேவைகளில் முன் பதிவு செய்யலாம். இந்த வசதி ஆன்லைனுக்கு மட்டுமே உண்டு.

63. ஆன்லைனில் 21 நாட்களுக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறப்புக் கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.

64. இப்போது தமிழக மின்சார வாரியமும் ஆன்லைனுக்குள் வந்துவிட்டது. உங்கள் மின் கட்டணங்களை இனி ஆன்லைனில் மிக எளிதாக p://www.tnebnet.org என்ற இணையதளத்துள் சென்று கட்டலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம் (இந்த வசதி சென்னை மற்றும் கோவைக்கு மட்டுமே தற்போது வந்துள்ளது).
 
65. சாதாரண தொலைபேசி, இணைய சேவை, மொபைல் போன், சொத்து வரி உள்பட அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். இதில் பல வசதிகள் பெருநகரங்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

போவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..!

66. ஷாப்பிங் என்றாலே பரவசம்தான். கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில், பரிசுப் பொருட்களுடன் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். நேர விரயம் இருக்காது.

67. ஆன்லைன் ஷாப்பிங் சற்று வித்தியாசமானது. பொருட்களை படங்களில் மட்டும் பார்த்து அவற்றை வாங்குவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்

68. முன் பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளிவிடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்!
 
69. நம்பத் தகுந்த இணையதளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.

70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

71. சற்று விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அதை உங்கள் வசம் ஒப்படைக்கும் வரை பொறுப்பு அவர்களுடையது. எனவே, பொருளுக்கு உரிய காப்பீடு செய்து ஷிப்பிங் முறையில் அனுப்புகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

72. இந்திய இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.

73. ஒவ்வொரு முறை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பிறகும், உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கின் கடவுச்சொல் உள்பட முக்கிய தகவல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

74. ஆன்லைன் ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.

75 உதாரணமாக, indiatimes.com, rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத் தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒலி, ஒளி, விளையாட்டுகள் என்று நம் பொழுதுபோக்குக்கான இணைய சேவைகள்!

5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு சராசரியாக 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், இணையத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்.

76. இணையத்தில் தற்போது சராசரியாக 131,98,72,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் 73% பேர் வீடியோ, ஆடியோ, கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

77. முன்பெல்லாம், வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கினால் மட்டுமே கணினியில் பார்க்க முடியும். இப்போது ஆன்லைனிலேயே வீடியோக்களை பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம், கேம்ஸ் விளையாடலாம். பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.

78 யூ-டியூப் (www.youtube.com), மெடாகேஃப் (www.metacafe.com) போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்கு பிரியர்களுக்கான அமுதசுரபிகள். இந்தத் தளங்களில் அந்தக் கால சினிமா பாடல்கள் முதல் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் வரை அனைத்தையும் கண்டு ரசிக்கலாம்.

79 திரைப்படங்கள் மட்டுமல்லாது, நகைச்சுவை, உண்மை சம்பவங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பதிவுகள் என எந்த வகையான வீடியோக்களையும் மேற்கண்ட தளங்களில் பார்த்து மகிழலாம்.
 
80 பாடல்களைக் கூட ஆன்லைனிலேயே தடையின்றி கேட்க உதவும் தளங்கள் உள்ளன. ஆனால், இவை சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படுபவை அல்ல. 100-க்கு 99 பயனாளர்கள் இதுபோன்ற இலவச சேவைகளையே நாடுவதால், முறையாக பணம் செலுத்தி பாடல்களைப் பதிவிறக்கும் தளங்கள் இன்று ஏறக்குறைய காணமலே போய்விட்டன.

81. ஆன்லைனில் பாடல்கள், படங்கள் பார்ப்பது மட்டுமின்றி கேம்ஸ் விளையாடலாம். சிறிய அளவிலான ஃபிளாஷ் விளையாட்டுக்களைக் கொண்ட ஏராளமான இணையதளங்கள் உள்ளன. இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் தங்கு தடையின்றி விளையாடலாம்.

82 ஆன்லைனில் விளையாடும்போது மிகுந்த கவனம் தேவை. பல இணையதளங்களில் விளையாட்டுகளில் வைரஸ்கள் கணக்கில்லாமல் உலவிக் கொண்டிருக்கும்.

83. சீரியஸாக ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறிய திரைகள் தோன்றி, ‘இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா?’ என்ற தொனியில் உங்களைக் கவர்ந்திழுக்கும். க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.

84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.
‘ஜி-டாக் (Google Talk)’-ல் பேசுங்கள்… ‘சாட்’டுங்கள்!

85 நண்பர்களுடன் அரட்டை, அலுவலக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடல், வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் என எந்த வகையான உரையாடல்களாக இருந்தாலும், ஜி-டாக் கை கொடுக்கும். ‘யாஹ” மெசெஞ்சரை’ கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டது ‘ஜி-டாக்’.

86. ஜி-மெயில் சேவையின் அங்கம்தான் ‘ஜி-டாக்’ என்பதால் மின்னஞ்சல் பக்கத்துக்கு எளிதாக செல்லலாம், நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டையடிக்க வீடியோ உரையாடல், ஆடியோ உரையாடல் என பல மேம்பட்ட வசதிகள் ஜி-டாக்கில் உள்ளன. http://www.google.com/talk/ தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

நம் வாசிப்பு பழக்கத்துக்கு தீனி போடும் இ-புக்ஸ் (E-books), இ-மேகஸின்ஸ் (E-magazines)!
கடைகளுக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்து, நேரத்தை ஒதுக்கி, படித்து முடிப்பது என்பது இன்றைய டீன் டிக்கெட்களுக்கு இயலாத காரியமாகிவிட்டது. ஆனாலும், அவர்களின் வாசிப்பு ஆர்வம் வாடாமல் பார்த்துக்கொள்ள பங்களிக்கின்றன மின் புத்தகங்களும், மின் பத்திரிகைகளும்!
 
87. இணையத்தில் தமிழ் உட்பட உலகின் ஏனைய மொழிகளில் வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களும் (ஏறக்குறைய) மின் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் ஏராளமான தலைப்புகளில் மின் புத்தகங்களைக் கொண்ட பல இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தளங்கள் இலவச சேவை செய்கின்றன.

88. இணைய தளத்தின் பெயர் தெரியாவிட்டாலும், தேடல் பொறிகள் மூலம் புத்தகத்தின் பெயரை அளித்து, மிக எளிதாக அந்தத் தளத்தை அடையலாம்.

89. புத்தகங்கள் பி.டி.எஃப். (Pdf) எனும் காப்பு வடிவத்தில் இருப்பதால், ஃபான்ட்ஸ் எனப்படும் எழுத்துருக்கள் மாறிவிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் வருவதில்லை. மிக எளிதாக பதிவிறக்கம் செய்து, பக்கம் பக்கமாக படிக்கலாம்.
 
90 பல தளங்களில் மின் புத்தகத்தை ஆன்லைனிலேயே படிக்கும் வசதி உள்ளது. அதிகளவில் படங்கள் இருந்தாலோ, பக்கங்கள் அதிகமாக இருந்தாலோ திறப்பதற்கு சற்று நேரமாகும். எனவே, பதிவிறக்கிப் படிப்பது நல்லது.

91. அடுத்ததாக, மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.

92. உதாரணமாக, அவள் விகடன் உள்ளிட்ட விகடன் பதிப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் படிக்கலாம். இதற்கென ஆண்டுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

93. நாளிதழ்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளன. குறிப்பாக, மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கும், தமிழில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நாளிதழ்களைவிட மிக வேகமாக, உடனுக்குடன் செய்திகளை புதுப்பித்துத் தருவதில் இணையதளங்கள் தனித்து நிற்கின்றன.

பிளாக் (Blog)… நமக்கே நமக்காக இணையத்தில் ஓர் இடம்!

நம் கருத்துக்களை, எண்ணங்களை எந்த தயக்கமும் இன்றி முழு சுதந்திரத்துடன் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் இடம்தான் ‘பிளாக்’ எனப்படும் வலைப்பதிவு. இணையதளங்களைப் போலவே, ஆனால், பைசா செலவில்லாமல் இலவசமாக நமக்கான வலைப்பக்கத்தை நிர்வகித்து, தகவல்களைப் பகிரலாம்.

94. பிளாக்கர் (www.blogger.com), வேர்டுபிரஸ் (www.wordpress.com) உள்பட பல இணையதளங்கள், வலைப்பதிவு சேவை அளிக்கின்றன. நமக்கான பக்கத்தின் வடிவமைப்புக்குத் தேவையான டெம்ப்ளேட்களையும் இலவசமாகவே தருகின்றன. தொழில்நுட்ப அறிவு என்பது வலைப்பதிவுகளுக்குத் தேவையில்லை.


95. நமது வலைப்பதிவைப் பிரபலப்படுத்துவதற்காகவே திரட்டிகள், அதாவது வலைப்பதிவுகளை ஒருசேர காட்சிக்கு வைக்கும் தளங்கள் உதவுகின்றன. www.tamilish.com, www.tamilmanam.net போன்ற திரட்டி தளங்களில் நமது வலைப்பதிவுகளை பதிவு செய்து பிரபலப்படுத்தலாம்.
வேலைவாய்ப்புக்கும் ‘க்ளிக்’குங்கள்!
மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் முதுகெலும்பாக இருக்கின்றன இணையதள சேவைகள். தற்போதுள்ள சூழலில் 90% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, ஆன்லைனிலேயே நடக்கிறது.

96 www.naukri.com, www.monsters.com, www.jobsdb.com உள்பட நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தளங்கள் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.


97 வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி மேற்படிப்புகளுக்கு உதவிபுரியும் ஏராளமான இணையதளங்களும் ஆன்லைனில் உலவுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைகள், கல்வி அறிஞர்களின் வழிகாட்டுதல்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பீடுகள் என, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டியாக இந்த இணைய தளங்கள் செயல்படுகின்றன.

முடிவில்லா இணையவெளியில் எச்சரிக்கை உணர்வும் அவசியம்!
இன்டர்நெட்டில் அழகான ஸ்வீட்டும் உண்டு; ஆபத்தான பாய்ஸனும் உண்டு. எனவே, சில அலர்ட் டிப்ஸ்கள்…

98 எந்த ஒரு சிறந்த சேவைக்கும் குறைகளும் இருக்கும். இது இணையத்துக்கும் பொருந்தும். கொடுத்த முழு சுதந்திரத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இணையத்தில் அதிகம். நமக்குத் தெரியாமல் அவர்கள் பக்கம் நாமும் சாயக் கூடும், அல்லது அவர்கள் வலையில் விழக்கூடிய சூழல் ஏற்படும்.

99. இணையத்தில் உலவும்போது, பார்வையிடும் இணையதளங்கள் அனைத்திலும் உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். சில மோசமான தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தவறாக பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல் கணக்கையே ஒன்றுக்கும் உதவாதது என்றாக்கிவிடுவார்கள். எச்சரிக்கை!
 
100 உங்கள் நண்பர்கள் உங்களுக்கு பரிசுகள் அனுப்பியிருப்பதாக மின்னஞ்சல் வரும். அதைக் கிளிக் செய்த சில நிமிடங்களில், உங்கள் ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும், அதே மின்னஞ்சல் செல்லும். அதில் நீங்கள் பரிசு அனுப்பியதாக செய்தி தோன்றும். இதனால் உங்கள் நற்பெயர் கெடும்… கவனம்!

இன்டர்நெட்டை கூலாக, கொஞ்சம் கேர்ஃபுல்லாக பயன்படுத்துங்கள்! பலன்கள் பல பல பெறுங்கள்!
யுரேகா… யுரேகா…
ல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய கிரேக்க அறிவியல் அறிஞர் ஆர்க்கிமெடீஸ், அந்தச் சமயத்தில் சொன்ன வார்த்தைகள்… ‘யுரேகா… யுரேகா’ (கண்டுபிடித்துவிட்டேன்… கண்டுபிடித்துவிட்டேன்). ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்த பின்னும் அந்தக் குரல் ஓயவில்லை. தினம் தினம் உலகம் முழுக்க புதிது புதிதாக ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் கம்ப்யூட்டர் விஷயத்தில் நிமிடங்களுக்கு ஒன்றாகக் கூட புது விஷயங்கள் முளைக்கின்றன. பல முனைகளில், பலதரப்பட்டவர்களும் மூளையைக் கசக்கிக் கொண்டு உழைப்பதால் நிகழும் அற்புதம் அது! அப்படிப்பட்ட அற்புதம் மற்றும் அதை உருவாக்கியவர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் ஆங்காங்கே இடம் பிடிக்கின்றன இந்த சின்ன புத்தகத்தில்…!

ங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டர்… கம்ப்யூட்டர்…! இந்த அதிசயக் கருவியை கண்டுபிடித்த பிதாமகன் யார்? ‘டிஃபரன்ஸ் இன்ஜின்’ என்பதுதான் முதல் கம்ப்யூட்டர். இந்த கான்செப்டை 1786-ம் ஆண்டில் உருவாக்கியவர் ஜெ.ஹெச்.முல்லர். அதன் பிறகு, அந்த விஷயத்தையே மறந்துவிட்டார்கள். ஆனால், அதே கான்செப்டை கையிலெடுத்து, 1822-ம் ஆண்டில் கட்டமைத்தார் ‘சார்லஸ் பாப்பேஜ்’. இவரைத்தான், ‘கம்ப்யூட்டரின் தந்தை’ என்கிறார்கள். இவர் கட்டமைத்த கம்ப்யூட்டர், கால ஓட்டத்தில் பல்வேறு நிபுணர்களின் கை வண்ணத்தால், பல பரிணாமங்களைக் கண்டு… இப்போது நாம் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது.

ன்டெர்நெட்டை யார் கண்டுபிடித்தார்கள்? உலகை ஆளும் ‘இன்டெர்நெட்’டை உருவாக்கியவர் ஒரே ஒரு மனிதர் அல்ல. அது பல அறிஞர்களின் உழைப்பால் விளைந்தது, படிப்படியாக வளர்ந்து, www (world wide web) என்ற நிலையை அடைந்துள்ளது.
முதன் முதலாக 1961-ல் இதனை உருவாக்கியவர் லியோநார்டு க்ளெய்ன்ராக் (Leonard Kleinrock) என்பவர். 1962-ல் ஜெ.சி.ஆர். லிக்லிடெர் என்பவர், லியேநார்டுடன் இணைந்து புது வலைதள ஐடியாவை உருவாக்கி, ARPANET என்று பெயரிட்டார். 1968-ல் ‘நெட்வொர்க் வொர்க்கிங் குரூப்’ என்ற நிறுவனம் இதனை இன்னும் நெறிப்படுத்தியது. 1969-ல் ‘யு.சி.எல்.ஏ.’ என்ற நிறுவனம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான இன்டெர்நெட்டை அறிமுகப்படுத்தியது.

மெயில் அனுப்புவது என்றாலே… ஒரு காலத்தில் அது ‘யாஹ”‘ என்பதாகத்தான் இருந்தது. 1990-களில் சி.வி. எனப்படும் ‘கரிகுலம் வீட்டாய்’ எழுதும்போது ‘யாஹ”‘ மெயில் ஐடி இருப்பதை கௌரவமாகக் குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் பல நிறுவனங்கள் களத்தில் இறங்கின. அத்தகைய பெருமைக்குரிய யாஹ” நிறுவனத்தை நிறுவியவர்கள்… ஜெரி யாங், டேவிட் ஃபிலோ ஆகியோர்தான்.

‘கூகுள்’ என்ற ஸர்ச் இன்ஜினுக்குள் (Search engine) நுழைந்து, வெண்டைக்காய் முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை அனைத்துத் தகவல்களையும் பெற முடிவது எப்படி? 1996-ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலிருந்து லேரி பேஜ், செர்கே பிரின் என்ற இருவர், ‘ஸர்ச் இன்ஜின்’ எனும் தேடு தளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார்கள். அதில் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயர், பல ஆயிரம் முறை பதிவாகியுள்ளதைக் கண்டுபிடித்தனர். அதுவரை அந்த நிறுவனம் ஒரு கம்பெனியாக முறையாக பதிவு செய்யப்படவில்லை. 1998, செப்டம்பர் 7-ம் தேதி அந்தக் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. அதுதான் இன்றைக்கு உலகின் நெம்பர் ஒன் தேடுபொறி தளமாக இருக்கும் கூகுள்!

‘ஆர்குட்’ எனப்படும் சோஷியல் நெட்வொர்க் முதலில் புழக்கத்துக்கு வந்தது… 2004 ஜனவரியில். உருவாக்கிய ‘ஆர்குட்’ பெயரிலேயே அது அழைக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டுக்குள் இதை அதிகம் பயன்படுத்தியவர்கள் அமெரிக்கர்கள்தான். அதன் புகழ் பரவியதும்… பிரேஸில்காரர்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இப்போது இந்தியா அந்த வரிசையில் நிற்கிறது. அமெரிக்கர்களோ… வேறு சைட்டுக்கு தாவி விட்டார்கள்.

ண்ணுக்குத் தெரியாத ‘செல்’ தொடங்கி, காணவே முடியாத ‘அண்டம்’ வரை உலகின் அனைத்து விஷயங்கள் குறித்தும் பக்கம் பக்கமாக தகவல்களை நிரப்பி வைத்திருக்கும் விக்கிபீடியா… ஓர் ஆச்சரிய என்சைக்ளேபீடியா. ‘ஜிம்போ’ என்றழைக்கப்படும் ஜிம்மி டோனல் (Jimmy Donal) என்ற அமெரிக்கர்தான் இந்த விக்கிபீடியாவை நிறுவியவர்.

ம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் லேட்டஸ்ட்டாக உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருப்பவர் பிரணவ் மிஸ்ட்ரி எனும் இந்தியர். இவர் சொல்ல ஆரம்பித்திருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ எனும் டெக்னாலஜி… பிரமிப்பின் உச்சிக்கே செல்ல வைக்கிறது. ‘மானிட்டர் தேவையில்லை, சி.பி.யு. தேவையில்லை. ஆனாலும் கம்ப்யூட்டர் உண்டு. அதுவும் உங்கள் ஒவ்வொருவரிடமும் உண்டு’ என்கிறார். தீப்பெட்டி மற்றும் மேளக்காரரின் கை விரல் முனைகளில் இருக்கும் உறை ஆகியவை போல சின்னஞ்சிறு கருவிகள் ஒன்றிரண்டை வைத்துக் கொண்டே… போட்டோ எடுக்கிறார், கட் அண்ட் பேஸ்ட் செய்கிறார், புத்தகத்தில் இருப்பதை காப்பி செய்கிறார். இந்தக் கம்ப்யூட்டருக்கு…. சுவர், பேப்பர், கைகள், சட்டை, சோபா… இப்படி எல்லாமே மானிட்டர்கள்தான்!




புதன், 29 செப்டம்பர், 2010

ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.

புதுமையான ஆங்கில எழுத்துருக்களை (Font) இலவசமாக தரவிரக்கலாம்.


ஆங்கிலத்தில் இருக்கும் கோடிக்கணக்கான எழுத்துருக்களில் சிறந்த எழுத்துருவை (Font)  எளிதாக இலவசமாக ஒரே இடத்தில் இருந்து தரவிரக்கலாம். இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கிலத்தின் பலவகையான எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன ஆனால் அழகான ஆங்கில எழுத்துக்கள் வித்தியாசமாக உள்ள எழுத்துருக்கள் காசுக்கு தான் கிடைக்கின்றன. ஒரு சில இடங்களில் தான் இது போன்ற
அரிவகை எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன என்றாலும் அந்த இடங்களில் கூட எல்லாவகையான எழுத்துருக்களும் கிடைப்பதில்லை ஒரு சில எழுத்துருக்கள் மட்டும் தான் கிடைக்கின்றன. இந்தப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.ffonts.net

இந்தத்தளத்திற்கு சென்று நாம் விரும்பும் வகையில் எந்த எழுத்துரு பிடித்திருந்தாலும் உடனடியாக Download என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்கலாம். 3D Fonts முதல் Cartoon Fonts வரை , Classic Fonts முதல்  Crazy Fonts வரை அத்தனை எழுத்துருவும் தனித்தனியாக வகை பிரிக்கப்பட்டுள்ளது. இதில் நமக்கு எந்த வகை எழுத்துரு வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து Download என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

Wi-Fi ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!


Wi-Fi ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" (Wireless Fidelity) என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாகபரவலாகிவருகிறது.

முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.

இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக வளர்ச்சியை பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வர்த்தகத் துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், இதனால் மக்கள்வாழ்முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றால் கணினிகள், லேப்டாப்கள், அடுத்த தலைமுறை அதி தொழில் நுட்ப ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும்பிற கைவழி பயன்பாட்டு மின்னணுக் கருவிகளின் தேவை கணிசமாக பெருகிவருகிறது. இதனுடன் சேர்ந்து 24 மணி நேர இணைப்புச் சேவை, பரவலானவிரிவலை (பேண்ட்வித்) ஆகியவற்றிற்குமான தேவைகளும் கூடி வருகிறது.

இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுக்ககூடிய ஒரு தொழில் நுட்பமான Wi-Fi தொழில்நுட்பம் தற்போது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில்விரும்பத்தகுந்த ஒரு இணைப்புத் தொழில்நுட்பமாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.



இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிய Wi-Fi அலையன்ஸ் நிறுவனத்தின்கணிப்பின்படி தற்போது Wi-Fi தொழில் நுட்பத்திற்கான இந்திய சந்தை 270 மில்லியன் டாலர்கள். 2011-12ஆம் ஆண்டுவாக்கில் இது 900 மில்லியன் டாலர்கள்சந்தையாக வளர்ச்சியடையும்.

ஆனால்... இந்த தொழில் நுட்பம் பல பாதுகாப்பு கவலைகளையும், அச்சுறுத்தல்களையும் அளிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொள்கையில், பாதுகாப்பு நிறுவனங்கள், இதற்கு காரணமான ஒரு மின்னஞ்சலை கண்டுபிடித்துள்ளது. அதனை பின்பற்றிச்செல்கையில் கென் ஹேவுட் என்ற அமெரிக்க குடிமகனின் கணினிக்குஇட்டுச் சென்றுள்ளது.


அதாவது அந்த அமெரிக்கக் குடிமகனின் கணினி ஹேக் செய்யப்பட்டு அதன்வழியாக இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இந்த தொழில் நுட்பம்நம்மிடையே சில கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.


அதாவது சரியாக கண்காணிக்கவில்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கில் உள்ளகுறைபாடுகளினால் ஹேக்கர்கள் எந்த ஒரு கணினி நெட்வொர்க்கிலும் புகுந்துநாச வேலைகளில் ஈடுபடமுடியும். இதனால் இதன் பயனாளர்களுக்குவிழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டிய கட்டாயம் பிறந்துள்ளது .


இதற்காக, வெள்ளை அறிக்கை ஒன்றையும் மஹிந்திரா ஸ்பெசல் சர்வீசஸ்குழுமம் (MSSG) வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்: "சிறப்பான பாதுகாப்பு செயல்முறைகள் - Wi-Fi -யின் அபாயங்கள் என்று arஅந்தவெள்ளை அறிக்கை தலைப்பிடப்பட்டுள்ளது.

Wi-Fi தொழில் நுட்பத்தினால் இணையதளம் உள்ளிட்ட இணைப்புகளில்நடந்துள்ள புரட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் வீடுகள் வரை அதன் மீது ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதன் பயனும், திறனும் மற்ற கம்பிவட இணைப்பு நெட்வொர்க்குகளை விட அதிகமானது. ஆனால் இது எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு பாதுகாப்பு அபாயங்கள் நிறைந்தது. எனவே இந்த குறிப்புகள் சிறந்த தடுப்பு உத்திகளை மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும்.

கம்பியற்ற இணைப்பு உங்கள் நெட்வொர்க்கை அடைய ஒரு பின்வாசல் வழி!

ஒயர்லெஸ் ஆக்சஸ் கார்டுகளின் மூலம் இயங்கும் லேப் டாப்கள், தானியங்கி இணைப்பு அமைப்புகள் ஆகியவை தற்போது பெருகி வருகிறது. அதாவது ஒயர்லெஸ் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தகவல்களை வான்வழியாக அனுப்புவதால், அதனை ஹேக் செய்வது சுலபம், அதாவது யார்வேன்டுமானாலும் அதனை பார்க்க முடியும். இதானல் ஹேக்கர்கள் எங்கிருந்தபடி வேண்டுமானாலும் நிறுவனங்களின் நெட்வொர்க்குகள் மட்டுமல்லாது ஒரு நாட்டின் பாதுகாப்பை தீர்மானிக்கும் ராணுவ சம்பந்தமான விஷயங்களையும் தகவல்களையும் வெளியிலிருந்தே அணுக முடியும்.


என்ன தவறு ஏற்பட முடியும்?

எதேச்சையாக அணுகுதல், அதாவது இதில் ஒரு பயனாளர் அடுத்ததாக உள்ளஒரு நிறுவனத்தின் ஊடுருவும் ஒயர்லெஸ் நெட்வொர்க் மூலம் ஒயர்லெஸ்அணுகல் புள்ளியைக் கைப்பற்றி அங்கிருந்து தகவல்களை திருடி என்னவேண்டுமானாலும் செய்யலாம்.

கெட்ட நோக்கத்துடன் அணுகுதல், இதில், ஹேக்கர்கள் ஒரு பொய்யானஅணுகல் இடங்களிலிருந்து தாங்கள் உருவாக்கிய ஒயர்லெஸ் கருவிகள் மூலம்எந்த ஒரு நெட்வொர்க்கையும் ஆட்கொண்டு, அதன் வழி செல்லும் தகவல்களைதிருடுவது.


தற்காலிக நெட்வொர்க்குகள், இதில் ஒயர்லெஸ் கணினிகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவது, அதாவது ஒயர்லெஸ் அணுகல் இடம் என்ற ஒன்றுஇல்லாமலேயே.

உங்கள் ஒயர்லெஸ் அணுகல் புள்ளி ஒரு குறிப்பிட்ட பகுதியை பரவலாகக்கொண்டு இயங்குவதால் நீங்கள் ஒயர் மூலம் அனுப்பும் செய்திகள் மற்றும்கார்ப்பரேட் தரவுகளை (datas) தொலைதூரத்திலிருந்தே அணுக முடிவது.

இதனைத் தடுக்க உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

* ஒயர்லெஸ் கருவி அட்மினிஸ்ட்ரேட்டர் தான்தோன்றி கடவுச்சொல்லைஉடனடியாக மாற்றவும். உதாரணமாக ரீ செட் 123 அல்லது அது போன்ற பிறபொதுவான கடவுச்சொல் தானாகவே உங்கள் கணினியில் இருந்தால் அதனைஉடனடியாக மாற்றி வேறு கடவுச்சொல்லை வைக்கவும்.

* உங்கள் ஒயர்லெஸ் கருவி பயன்படுத்தக்கூடிய WPA/WEP பாதுகாப்புகுறியேற்றங்களை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும்.

* பயனில் இல்லாத போது Wi-Fi மீடியாவின் இயக்கத்தை நிறுத்தி வைப்பது நல்லது. அல்லது பிளக்கை பிடிங்கி வைப்பதும் சிறந்தது.


* MAC முகவரி வடிக்கட்டி அமைப்பை ஏற்படுத்தி அதிகாரபூர்வ கருவிகளுக்குமட்டுமே இணைப்பை அனுமதிக்கவும்.

* தானாகவே உள்ள சர்வீஸ் செட் ஐடென்டிஃபையர் (எஸ்.எஸ்.ஐ.டி.)ஐ உடனடியாகமாற்றவும்.


* தேவையில்லை என்றால் எஸ்.எஸ்.ஐ.டி. ஒலிபரப்புகளை நிறுத்தி விடுங்கள்.

* திறந்த Wi-Fi நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் அமைப்பின்இயக்கத்தை நிறுத்தி வைக்கவேண்டும்.


* உங்கள் ஒயர்லெஸ் பாதைகள் அனைத்திலும் ஃப்யர்வால்களை (Firewalls) உருவாக்கவும்.


* உங்கள் வளாகத்தின் மையப்பகுதியில் உங்கள் ஒயர்லெஸ் அணுகள் இடத்தைவையுங்கள். சுவற்றிலோ மூலைகளிலோ வைத்தால் கசிவுகள் ஏற்படும்.


இந்த குறிப்புகள், தனிப்பட்ட பயனர்களுக்கு ஓரளவிற்கு பொருந்தகூடியது. நிறுவனஙளும், அமைப்புகளும் இதனை பரந்துபட்ட அளவில்மேற்கொள்ளவேண்டியிருக்கும். ஒரே படித்தான பாதுகாப்பு முறைகளை இவைகடைபிடிக்க வேண்டும்.

என்ன தொழில் நுட்பத்தை கண்டுபிடித்தாலும், அதனை உடைத்து உள் நுழையும்தொழில் நுட்பத்தை இந்த தொழில் நுட்பங்களிலிருந்தே கண்டுபிடித்துவிடமுடிகிறது என்பதே இதன் மையப் பிரச்சனை. என்று தணியும் இந்தவலைப்பின்னல் பாதுகாப்பு தாகம்?


பதிவு பிடித்திருந்தால் மறக்காம ஒட்டு போட்டுட்டு போங்க